சிகாகோவில் முழங்கிய சிங்கம்
த. ஸ்டாலின் குணசேகரன்
""நான் இந்தியா முழுவதும் பயணம் செய்தேன். ஐயகோ! என் சொல்வேன். சகோதரர்களே! மக்களின் கொடிய வறுமையை என் கண்களில் கண்டு துயருற்றேன். என் கண்களில் பெருகிய நீரைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களுடைய வறுமையையும், துன்பங்களையும் அகற்ற முதலில் முயற்சி செய்யாமல், அவர்களிடம் மதத்தைப் போதிப்பது பயனற்றது என்பது என் உறுதியான முடிவாகும். இக் காரணத்திற்காகவே, இந்திய ஏழை மக்களின் விமோசனத்திற்கு வழிதேட நான் அமெரிக்கா சென்று கொண்டிருக்கிறேன்'' என்று தனது சிகாகோ பயணத்திற்கான காரணத்தைப் பிரகடனப்படுத்தினார் சுவாமி விவேகானந்தர்.
""கீழை நாட்டின் அறிஞர் பெருமான் ஒருவர் அரசாங்கத்தின் உதவியில்லாமல், அழைக்கப்படாமல், எந்த ஒரு சமய அமைப்பின் ஆதரவில்லாமல், ஆழம் காணவியலாத கடலால் பிரிக்கப் பெற்ற இந்தியாவிலிருந்து மேற்கொண்ட பயணம் முதல்தடவையாக நவீன இந்தியாவின் வரலாற்று ஏடுகளிலும் அமெரிக்காவின் சமய வரலாற்றிலும் பதிவாகியுள்ளது'' என்று விவேகானந்தரின் அமெரிக்க பயணம் குறித்து சுவாமி அபேதானந்தர் குறிப்பிடுகிறார்.
1893-ம் ஆண்டு செப்டம்பர் 11-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை பதினேழு நாள்கள் அமெரிக்க நாட்டிலுள்ள சிகாகோ நகரில் சர்வமத சபைக் கூட்டம் நடைபெற்றது. உலக சமய வரலாற்றில் பல மதங்கள் ஒன்றிணைந்து உலகளாவிய சர்வமத சபைக் கூட்டத்தை நடத்தியது இதுவே முதன்முறையாகும்.
இம்மாநாட்டில் கிறிஸ்தவ மதத்தின் இரு பிரிவுகள், இஸ்லாம் மதம், இந்து சமயம், சமண சமயம், பெüத்தம், யூதம், கன்பூஷியஸ் மதம், ஷிண்டோ மதம், ஜராதுஷ்ட்ர மதம் என 10 மதங்கள் பங்கேற்றன. பலவிதமான மதங்களின் அடிப்படைக் கொள்கைகள் எவை என்பதையும், அவ்வாறான கொள்கைகள் மக்கள் மத்தியில் எவ்வாறு போதிக்கப்படுகிறது என்பதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுதல் சர்வமத சபைக் கூட்டத்தின் நோக்கங்களில் ஒன்றாகும்.
அதேபோன்று அக்காலத்தின் பெரும் பிரச்னைகளான மதுப்பழக்கம், கல்லாமை, வறுமை முதலியவற்றுக்கு தீர்வுகாண மதம் எவ்வாறெல்லாம் உதவ முடியும் என்பதை தகுதிவாய்ந்த மதத்தலைவர்களின் உரைகளின் மூலம் அறிந்து கொள்ளும் நோக்கிலும் இச்சபைக் கூட்டம் கூட்டப்பட்டது. நிலையான உலக சமாதானத்தைப் பெறுவதற்கு ஒரு நாட்டோடு இன்னொரு நாடு நட்பு பாராட்ட இக் கூட்டம் அடித்தளமாகுமென்றும் அறிவிக்கப்பட்டது.
சர்வமத சபைக் கூட்ட நிகழ்ச்சிகள் தினசரி காலை பத்து மணிக்குத் தொடங்கி இரவு பத்து மணி வரை கருத்தரங்க முறையில் நடைபெற்றது.
சபை கூடிய அரங்கில் ஏறத்தாழ ஏழாயிரம் மக்கள் அமர்ந்திருந்தனர். இந்தியாவிலிருந்து பிரம்ம சமாஜத்தின் பிரதிநிதிகளாக கோல்கத்தா பிரதாப் சந்திர மஜும்தார், மும்பை நாகர்கர், சமண சமயத்தின் சார்பில் வீர்சந்த் காந்தி, பிரம்ம ஞான சபையின் பிரதிநிதிகளாக அன்னிபெசன்ட் அம்மையார், சக்கரவர்த்தி, இலங்கை மகாபோதி சொசைட்டியின் சார்பில் அனகாரிக தர்மபாலா, மணிலால் துவேதி, நரசிம்மசார்யா, லட்சுமி நாராயணன் ஆகியோரும் இச்சர்வமத சபையில் பங்கேற்றனர்.
இச் சபையில் பங்கேற்ற சுவாமி விவேகானந்தர் குறித்து சுவாமி நிகிலானந்தா ""சுவாமி விவேகானந்தர் எந்தக் குறிப்பிட்ட சமய உள்பிரிவின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ளாமல், வேதங்கள் கூறும் அனைத்து உலக சமயத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
விவேகானந்தரின் தோற்றம் அங்கு குழுமியிருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. சுமார் ஆறடி உயரமும், கட்டுக்குலையாத கம்பீரமான உடற்கட்டும், நீண்டு தொங்கிக் கொண்டிருந்த ஆரஞ்சு வண்ண அங்கியும், காவி நிறத் தலைப்பாகையும் அடங்கிய அவரின் தோற்றப்பொலிவு அங்கிருந்தவர்களின் பார்வையை அவரின் பக்கம் திருப்பிற்று.
மேடையில் நடைபெற்ற பிரதிநிதிகளின் அணிவகுப்பிற்குப் பிறகு நாற்காலிகள் ஒதுக்கப்பட்டதில், சுவாமி விவேகானந்தர் வரிசைக் கிரமத்தில் முப்பத்தொன்றாம் இடத்தில் அமர்ந்து கொண்டார்.
சபையின் தொடக்க நாளின் தொடக்க நிகழ்ச்சி குறித்து விவேகானந்தர் தனது நண்பர் அழகியசிங்கப் பெருமாளுக்கு எழுதிய கடிதத்தில் ""பொதுமேடையில் பேசியறியாத நான் இந்த மகத்தான கூட்டத்தில் பேச வேண்டும்! இசை, சடங்கு, பேச்சுகள் மூலம் சபை தொடங்கியது. பேராளர்கள் ஒருவர் பின் ஒருவராக அறிமுகப்படுத்தப்பட்டார்கள். எனக்கோ இதயம் படபடவென்று அடித்துக் கொண்டிருந்தது. நாக்கு கிட்டத்தட்ட வறண்டு போய்விட்டது. ஒருவகையான அச்ச உணர்வு என்னைப் பற்றிக் கொண்டதால் காலையில் பேசத் துணிவுற்று இருந்தேன்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
சர்வமத சபைக்கு முன்பு அமெரிக்காவிலேயே பொதுஇடங்களில் மூன்று முறையும், தனியார் வீடுகளில் இரண்டு முறையும் பேசியிருப்பதற்கான ஆதாரங்கள் இருப்பினும், அவற்றையெல்லாம் சொற்பொழிவுகளாக விவேகானந்தர் கருதிக் கொள்ளவில்லையென்றும், தனக்களிக்கப்பட்ட சம்பிரதாயப் பூர்வமான கெüரவமாகவே மனதளவில் நினைத்திருந்திருக்கிறார் என்றும் உணர முடிகிறது.
சர்வமத சபைக் கூட்டம் தொடங்கப்பட்டு ஒவ்வொருவராக பேசுவதற்கு கூட்டத் தலைவரால் அழைக்கப்பட்டனர். முதல் நாள் காலை அமர்விலேயே விவேகானந்தர் பலமுறை அழைக்கப்பட்டும் சுவாமிஜி "பிறகு பேசுகிறேன், அடுத்து பேசுகிறேன்' என்று தயக்கத்துடன் சொல்லி வந்தார். கூட்டத்தலைவருக்கு விவேகானந்தர் "பேசும் வல்லமை உள்ளவரா' என்ற சந்தேகமும் குழப்பமும் ஏற்பட்டது.
மதிய இடைவேளைக்குப் பின்னர் நான்கு பேச்சாளர்கள் பேசியதற்குப் பிறகு, விவேகானந்தர் வற்புறுத்தி அழைக்கப்பட்டார். கூடியிருந்த பல்லாயிரம் மக்கள் முன்பு தோன்றிப் பேசத் தொடங்கினார். இந்த விநாடிக்கு முன்பு அவரின் நெஞ்சில் குடிகொண்டிருந்த அச்சம் எப்படிப் பறந்து போயிற்று என்றே விளங்கவில்லை. வறண்டு போயிருந்த நாக்கு வாள்வீச்சாய் சுழன்று நாதம் எழுப்பியது.
""அமெரிக்க நாட்டு சகோதரிகளே! சகோதரர்களே!'' என்ற சொற்றொடர் மூலம் சொற்பொழிவைத் தொடங்கினார் விவேகானந்தர். அடுத்த வாக்கியத்திற்கு வாய் திறப்பதற்கு முன்பு, அவையில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கானோரும் எழுந்து நின்று உணர்ச்சிவசப்பட்ட நிலையில் கரவொலி எழுப்பினர். பரவச நிலையில் இரண்டு முழு நிமிடங்கள் இடைவெளியின்றி கரவொலி தொடர்ந்து ஒரு அலை ஓய்வதுபோல் ஓய்ந்தது.
விவேகானந்தருக்கு முன்பு உரையாற்றியவர்கள் ""கனவான்களே! சீமாட்டிகளே'' என்று வழக்கமான பாணியில் பேச்சைத் தொடங்கினர். இவற்றுக்கெல்லாம் முற்றிலும் மாறுபட்ட முறையில் "சகோதரிகளே! சகோதரர்களே!' என்று அழைத்ததும், அவர் சொற்பொழிவைத் தொடங்கிய கம்பீரமும், குரலுக்கு இருந்த கவர்ச்சியும் "உதட்டளவில் உச்சரிக்கிறார்' என்று எண்ணாமல் இந்த சொற்றொடரை உயிரோட்டமாக உண்மையில் உணர்ந்து பேசுகிறார் என்று அவையினர் மனதார நினைத்ததும்தான் அங்கு நிலவிய உணர்ச்சிகர சூழலுக்கான உண்மைக் காரணமாகும்.
""பிறருடைய கொள்கையை வெறுத்து ஒதுக்காத பண்புடமை, அக்கொள்கைகளை ஏற்றுக் கொள்கிற பொதுநோக்கு என்ற இரண்டினையும் உலகிற்கு கற்பித்த சமயத்திற்கு நான் உரியவன் என பெருமை பாராட்டுகின்றேன். எல்லாச் சமயங்களையும் அன்பினோடு நோக்குகின்ற பண்புடைமையிலே எங்களுக்கு நம்பிக்கையுண்டு. அதுமாத்திரமல்ல; எல்லாச் சமயங்களையும் உண்மை மார்க்கங்களென நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்'' என்று இந்து சமயத்தின் சர்வசமய சமரச நெறிக் கண்ணோட்டத்தை தனது உரையின் தொடக்கத்திலேயே அழுத்தமாகக் குறிப்பிட்டார் விவேகானந்தர்.
சர்மமத சபைக் கூட்டத்தின் முதல் நாளில் மொத்தம் 24 சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. விவேகானந்தர் அன்று ஆற்றிய உரைக்குப் பின்னரும் நான்கு உரைகள் இடம்பெற்றன. அன்றைய நாளில் விவேகானந்தர் உரையே வந்தோர் அனைவரின் ஒட்டுமொத்த பெரும் பாராட்டுதலையும் பெற்றது. ஒரேநாளில் ஒரே உரையில் புகழ்க்கொடி நாட்டிவிட்டார் விவேகானந்தர்.
முதல் நாள் உரைகளெல்லாம் முடிந்த பின்னர் இரவு தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆடம்பர வசதிகளைக் கொண்ட பங்களாவில் தனக்குக் கிடைத்த பெயரையும், புகழையும் எண்ணி எண்ணி மகிழ்ந்து கொண்டிருப்பதற்குப் பதிலாக, வெறும் தரையில் படுத்துக் கொண்டு இந்திய மக்களின் வறுமைகளையும், துன்ப துயரங்களையும் நினைத்து விம்மி விம்மி அழுதார் விவேகானந்தர்.
எந்த நிலையிலும் இந்திய நாட்டு ஏழை-எளிய மக்களின் வாழ்வியல் துன்பங்களை மனதில் அசைபோட்டு கசிந்து உருகுவதைக் கடைசிவரை வழக்கமாகக் கொண்டு வாழ்ந்தார் விவேகானந்தர்.
இரண்டாவது சொற்பொழிவு இந்தியாவின் நாட்டுப்புறப் பண்பாட்டின் சிறப்புகளை வெளிப்படுத்தியது. கற்றறியாத ஏழை மக்களின் வாழ்க்கையை விளக்கும் கதைகளை உள்ளடக்கியதாக இரண்டாவது சொற்பொழிவு அமைந்தது.
மூன்றாவது சொற்பொழிவு முதலிரண்டு சொற்பொழிவுகளைப் போன்றல்லாமல் "இந்து மதம் பற்றிய கட்டுரை' என்ற தலைப்பில் எழுதிப் படிக்கப்பட்ட ஆய்வுக் கட்டுரையாகும்.
நிகழ்ச்சி நிரலில் விவேகானந்தரின் உரை கடைசியாக இடம்பெற்றிருந்தது. சர்வமத சபைக்கு வந்திருந்த பல்லாயிரம் பேரும் விவேகானந்தரின் உரையை ஆர்வத்துடன் எதிர்பார்க்கத் தொடங்கிவிட்டதால், முன்கூட்டியே அவரைப் பேசவிட்டால் கூட்டம் கலைந்துவிடும் என்று எண்ணி கடைசியில் பேச வைக்க முடிவெடுத்தனர்.
ஒரு பேராசிரியர் பேசப்பேச மக்களுக்கு சலிப்பு ஏற்பட்டு, பலர் அரங்கத்தை விட்டு வெளியேறி தங்களுக்குள் பேசிக் கொண்டிருந்தனர். அரங்கிற்கு வெளியில் நின்றிருந்த அனைவரையும் உடனடியாக உள்ளே வந்து அமரவைக்கும் நோக்கில் ""அடுத்து விவேகானந்தர் பேசுகிறார்'' என்று அறிவித்தனர். சில விநாடிகளில் அரங்கம் பழையபடி நிரம்பியது. கடைசியில் பேசவிருந்த விவேகானந்தர் இதன் காரணமாக முன்கூட்டியே பேச வேண்டியதாயிற்று.
ஐந்து சிறப்பு சொற்பொழிவுகள், வெவ்வேறு நாள்களில் நிகழ்த்தப்பட்ட பின்னர் நிறைவு நாளிலும் வீர உரை நிகழ்த்தினார் விவேகானந்தர்.
""உதவி செய், சண்டையிடாதே; ஒன்றுபடுத்து, அழித்துவிடாதே; சமரசமும், அமைதியும் வேண்டும், கருத்து வேறுபாடு வேண்டாம் என்பதை ஒவ்வொரு சமயமும் தனது கொடியில் விரைவில் எதிர்ப்பிற்கிடையே எழுதும் என்பதை நான் சுட்டிக்காட்டுகிறேன்'' என்று நிறைவாக அழுத்தம்திருத்தமாக முழங்கினார் வீரத்துறவி விவேகானந்தர்.
(இன்று விவேகானந்தர் பிறந்தநாள்).
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment