சந்தன மரங்கள் எண்ணிக்கையில் குறைந்து போனதற்கு கடத்தல்காரர்கள் மட்டுமே காரணமல்ல; முதல் காரணம் அரசுதான்.
திப்பு சுல்தான் காலத்தில்தான் சந்தன வணிகம் அரசு மட்டுமே செய்யக்கூடியதாகவும் சந்தன மரங்கள் அரசின் சொத்துகளாகவும் மாறியது. அந்தநாள் முதலாகவே சந்தனத்துக்கு அதிக விலை கிடைக்கும் காரணத்தால் அரசு அதிகாரிகளை கைக்குள் போட்டுக் கொண்டு சந்தன மரங்களைக் கடத்தும் சட்டவிரோத வணிகம் நடக்கத் தொடங்கியது. இந்தி
Save Now
இப்போதாகிலும் சந்தன மரத்தை அரசின் பிடியிலிருந்து விடுவிப்பார்களா என்று எதிர்பார்த்தால், அதற்கான வாய்ப்பே இல்லையோ என்று சந்தேகம் கொள்ள வைக்கிறது அரசின் விதிமுறைகள்.
தற்போது அமலுக்கு வந்துள்ள தமிழ்நாடு பட்டா நிலங்களில் சந்தன மரங்கள் வளர்ப்புச் சட்டம் 2008-ன் படி சந்தன மரத்தை யார் வேண்டுமானாலும் வளர்க்கலாம் என்று சொல்கிறது. ஆனாலும் திப்பு சுல்தான் காலத்தில் எப்படி ஒரு வரியில் சந்தன மரம் அரசுக்குச் சொந்தம் என்பது உறுதிப்படுத்தப்பட்டதோ அதே விஷயத்தை தலையைச் சுற்றி மூக்கைத் தொடுவதாக இருக்கிறது இந்த புதிய சட்டமும்.
சந்தன மரம் வளர்க்க விரும்புவோர் தன் பெயரில் பட்டா உள்ளதை நிரூபித்து, மாவட்ட வன அலுவலரிடம் அனுமதி பெற்று சந்தன மரங்களை வளர்க்க வேண்டும். வனச்சரகர் வந்து மரங்களை ஆய்வு செய்வார். வனப்பாதுகாப்பு சட்டத்தின்படி அமைக்கப்பட்டுள்ள மாவட்டக் குழுவின் சம்மதத்துடன் இந்த சந்தன மரங்களை வனத்துறையே வெட்டி எடுத்துச் செல்லும். மரத்தின் தரத்துக்கு ஏற்ப சந்தை விலை நிர்ணயிக்கப்படும். மரத்தை வெட்டி எடுத்துச் சென்றது மற்றும் இதர செலவுகளுக்காக மரத்தின் மொத்த மதிப்பில் 20 சதவீதத்தை அரசு பிடித்தம் செய்து கொண்டு மீதித் தொகையை 90 நாள்களுக்குள் உரிமையாளருக்கு வழங்கும். இத்தனை நடைமுறைகளும் முடிந்து பணம் கைக்கு வரும்போது கைகளில் சந்தனம் மணக்கிறதோ இல்லையோ லஞ்சம் மணக்கும் என்பது ஊரறிந்த உண்மை.
இதில் சொல்லப்படாத தகவல் ஒன்று: இதனிடையே சந்தன மரத்தை யாராகிலும் வெட்டி எடுத்துச் சென்றுவிட்டால், "இதை நான் வெட்டவில்லை; உண்மையிலேயே திருடுபோனது' என்பதை நிரூபிப்பதற்கு மரம் வளர்த்தவர் படாதபாடு படவேண்டும்.
எதற்காக இத்தனை நிபந்தனைகள்? இதனால் யாரை ஊக்குவிக்க முடியும்? இந்த நிபந்தனை மரத்தை வளர்ப்பதற்கா, வளர்க்காமல் தவிர்ப்பதற்கா?
இந்தியாவில் கர்நாடகம், ஆந்திரம், தமிழ்நாடு மூன்று எல்லைகளும் இணைந்த மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில்தான் சந்தன மரங்கள் மிகுதியாக இருந்தன. இப்போது குறைந்துவிட்டன. அப்பகுதிகளில் சந்தன மரக்கன்றுகளை வளர்க்கும் திட்டங்களை மாநில அரசுகள் செய்து வருகின்றன.
தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, சேலம், ஈரோடு மாவட்டங்கள் சந்தன மர வளர்ப்புக்கு ஏற்ற பகுதிகள். யார் வேண்டுமானாலும் சந்தன மரங்களை வளர்க்கலாம்; அந்த மரங்களை வெட்டிக் கொண்டுவந்தால் அதன் எண்ணெய் தரத்துக்கு ஏற்ப அரசு விலை கொடுக்கும் என்று விதிமுறைகளை எளிமையாக்கினால், இந்த நான்கு மாவட்டங்களிலும் முருங்கை மரம் போல ஒவ்வொரு வீட்டிலும் ஒரு சந்தன மரம் வளர்ப்பார்கள். பணத்தேவை ஏற்படும்போது அதை வெட்டிக் கொண்டுபோய் அரசுக் கிடங்கில் எடைக்குப் போட்டு பணம் பார்ப்பார்கள்.
ஆனால், சந்தன மரம் வீட்டில் வெட்டப்பட்டதா, காட்டில் வெட்டப்பட்டதா என்று வேறுபாடு இல்லாமல் போய்விடும் என்பதற்காக இந்த நிபந்தனைகள் என்கிறார்கள். காட்டில் உள்ள சந்தன மரங்களை காப்பாற்ற வேண்டியது வனத்துறையின் பொறுப்பு. தங்கள் கடமையை எளிமையாகச் செய்வதற்குத்தான் இத்தனை நிபந்தனைகளே தவிர, சந்தன மரம் பற்றிய கவலைகள் இந்த அதிகாரிகளுக்குக் கிடையாது.
நாம் இத்தனை கட்டுப்பாடுகள் விதித்து சந்தன மரம் வளர்ப்பதற்கு தடைகள் போடும் வேளையில், இந்திய சந்தன மரக்கன்றுகளை கொண்டுசென்ற ஆஸ்திரேலியா மிகப் பெரிய அளவில் சந்தனத் தோட்டங்களை குனன்னுரா என்ற இடத்தில் அமைத்துள்ளது. உலகில் இந்திய சந்தன எண்ணெய்க்கு விலை அதிகம். ""2023ம் ஆண்டில் மேற்கு ஆஸ்திரேலியாவில் ஆண்டுக்கு 130 டன் சந்தன எண்ணெய்யை விற்பனைக்கு கொண்டுவருவோம்'' என்று அறுதியிட்டுச் சொல்கிறது ஆஸ்திரேலியாவின் ஊரக தொழில்கள் ஆய்வு மற்றும் மேம்பாட்டு நிறுவனம்.
ஆனால் இந்தியாவிலோ, காட்டில் உள்ள சந்தன மரங்களையும் வனத்துறையினர் பொறுப்புடன் பாதுகாக்க மாட்டார்கள். மக்கள் தங்கள் விருப்பத்துக்கு வளர்க்கவும் விடமாட்டார்கள். நிலைமை இப்படியாக நீடித்தால், சந்தனத்தை கால்நூற்றாண்டுக்குப் பின்னர் நாமும் ஆஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
No comments:
Post a Comment