Pages

Tuesday, January 13, 2009

ஆண்ட இனம் அழியலாமா? Thanks to Dinamani

ஆண்ட இனம் அழியலாமா? Thanks to Dinamani

கே.எஸ். இராதாகிருஷ்ணன்

வரலாற்றில் முதல், இடைத் தமிழ்ச்சங்கங்கள், கபாடபுரம், லெமூரியா கண்டம் அழிந்துவிட்டன என்றும், அதன் எச்சமாக தற்போது இலங்கைத் தீவு உள்ளது என்றும், எனவே இலங்கைத் தீவு தமிழ் மண்தான் என்றும் சரித்திர ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகின்றனர். கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே யாழ்ப்பாண தமிழ் அரசுகள் அங்கு சேது நாணயம், நந்திக் கொடி கொண்டு சிறப்பாக ஆட்சி நடத்தின என்பது வரலாற்று உண்மை.

கலிங்கப் போருக்குப் பின் அசோகர் பௌத்த மதத்தைத் தழுவினார். மகேந்திரன் தலைமையில் பௌத்த குழுவை இலங்கைக்கு அனுப்பினார். அனுராதபுரத்தில், திஸô என்ற மன்னன் ஆட்சியில் மகேந்திரர் குழு அங்கு பௌத்த போதனைகளைப் போதித்தபின் பௌத்த மதம் அங்கு வந்தது என்று கூறப்படுகிறது. அதற்கு முன்பே தமிழர்கள் அங்கு வாழ்ந்தனர் என்பதுதான் வரலாற்று உண்மை. இப்படியெல்லாம் ஆண்ட தமிழினம் இன்று இனப் பாகுபாடு காரணமாக அழிவில் உள்ளது.

போர்ச்சுகீசியர், டச்சு, ஆங்கிலேயர் ஆட்சிகள் முடிவுக்கு வந்தபின் தமிழர்களின் பூர்வகுடியின் அடையாளங்களைத் திட்டமிட்டு ஒதுக்கி சிங்கள ஆட்சிகள் தமிழின அழிப்பு வேலைகளில் இறங்கின.

இலங்கையில் 1948-ல் ஆங்கிலேயர் வெளியேறிய பின் 1949-ல் குடியுரிமைச் சட்டம், 1956-ல் தனிச் சிங்களச் சட்டம், 1972-ல் அரச மதவாதச் சட்டம் எனக் கொடிய சட்டங்களைக் கொண்டு வந்து சிங்கள அரசு தமிழர்க்கு எதிராக நடந்து கொண்டது. தமிழர்கள், சிங்கள அரசுக்கு எதிராகப் போராடினரே தவிர, தனிப்பட்ட சிங்களவரை எதிர்த்துப் போராடவில்லை. ஆனால், சிங்களத்தவர்களோ தமிழர்களை விரோதியாகக் கருதினர். தமிழர்கள் சம உரிமையுடன் வாழ வேண்டும் என்றுதான் போராடினார்கள் என்பதுதான் உண்மை.

இனம், நிறம், மொழி, மதம், கலாசாரம், பழக்கவழக்கங்கள், அரசியல் நிலைப்பாடுகள், தாய் மண், பிறப்பு என்ற நிலையில் உரிமைகளைப் பெற ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு என்று ஐ.நா. மன்றத்தின் பிரகடனம் 1948-ல் நடைமுறைக்கு வந்தது. மேற்குறிப்பிட்ட தகுதிகளைக் கொண்டுதான் தேசிய இனங்கள் வகுக்கப்படுகின்றன. அந்நிலையில் ஈழத்தில் வாழும் தமிழர்களும் ஓர் இனம்.

1990-ம் ஆண்டுக்குப் பின்பு வரை உலகளவில் 23 தேசிய இனங்கள் பிரிந்து தங்களுக்கான அரசுகளை அமைத்துக் கொண்டுள்ளன. இவை பன்னாட்டு அளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.

தன்னாட்சி சுய உரிமை உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நியாயங்கள் ஆகும். 1775-ல் நடைபெற்ற அமெரிக்க விடுதலைப் போரும், 1789-ல் ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சியும் இன்றைக்கும் வரலாற்றில் பேசப்படுகின்றன. இப்போராட்டங்கள் யாவும் தன்னாட்சி உரிமைக்கு வித்திட்டவையாகும். ஆதிக்கம், அடிமைத்தனம், பாசிசம் என்ற நிலையில் இன வேற்றுமை பார்க்கும்போது புரட்சி, சுய நிர்ணயம், விடுதலை என்ற தாகம் ஏற்படுகிறது.

இங்கிலாந்திலிருந்து அயர்லாந்தும், ரஷியாவிலிருந்து போலந்தும், பின்லாந்தும், சுவீடனிலிருந்து நார்வேயும் தன்னாட்சி உரிமை பெற்றதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். ஒரு தேசிய இனம் சுய நிர்ணய உரிமையை நிலைநாட்டி வெற்றி பெறும்பொழுதுதான் அங்கு ஜனநாயகமும், மக்கள் ஆட்சியும் மலரும்.

உலக அளவில் இதுபோன்று தேசிய இனங்கள் பிரிந்து பல தனி நாடுகள் தோன்றியுள்ளன. வங்கதேசம், செக்கோஸ்லேவேகியாவிலிருந்து செக், ஸ்லோவியா என இரு நாடுகளும், யூகோஸ்லேவியாவிலிருந்து போஸ்னியா மற்றும் ஹெர்சிகோவினா, செர்பியா, குரோஷியா, மாண்டெனெக்ரோ, மாசிடோனியா, சுலவேனியா என ஆறு நாடுகள் தங்களது தேசிய இனத்தின் பிரச்னைகளைக் கொண்டு சுய நிர்ணய உரிமையை நிலைநாட்டின.

அதேபோல கொசாவா போராட்டம் 27 ஆண்டுகள் நடைபெற்று தனி நாடாகியது. அல்பேனியா எழுச்சியும் வரலாற்றில் இடம் பெற்றுள்ளது. கிழக்கு தைமூரும் தங்கள் தேசிய இனப் போராட்டத்தில் வெற்றி கொண்டு தங்களின் இறையாண்மையை நிலைநாட்டியது. பாலஸ்தீனப் போராட்டம் இன்றும் உலக மக்களால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு உலகில் பல இனங்கள் தங்களுடைய தேசிய இனத்தைத் தற்காத்துக் கொள்ளப் போராடி வெற்றி கண்டுள்ளன. அதே பாதையில்தான் இலங்கையிலும் தமிழ் இன மக்கள் போராடி வருகின்றனர். கடந்தகால துன்பியல் பிரச்னைகளைக் கொண்டு தொடர்ந்து ஈழப் பிரச்னை தீண்டப்படாத பிரச்னை என நினைப்பது மனித நாகரிகத்துக்கும் இயற்கையின் நீதிக்கும் புறம்பானது ஆகும்.

இந்திய மக்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமலே இந்திய அரசு இலங்கைவாழ் தமிழர்களைக் கொல்ல அனைத்து உதவிகளைச் செய்வது மட்டுமல்லாமல், நாம் கொடுக்கும் வரிப் பணத்திலிருந்து பாகிஸ்தானிலிருந்து ஆயுதம் வாங்கக் கடன் கொடுப்பதில் என்ன நியாயம் உள்ளது?

இலங்கையில் ஆளும் ராஜபக்ஷ அரசு, மைனாரிட்டியாக இருந்து 45 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவியதால் அரசாங்கத்தை அமைத்துள்ளது. அப்படிப்பட்ட ராஜபக்ஷவுக்கு இந்திய அரசு ஆதரவு தருகிறது என்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. 225 இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களில் 112 பேர் அமைச்சர்கள். இப்படி துக்ளக் தர்பார் இலங்கையில் நடக்கிறது. ராஜபக்ஷ அமைத்துள்ள குழுவில் தமிழ் எம்.பி.க்கள் யாரும் இடம் பெறவில்லை. இதெல்லாம் தெரிந்திருந்தும் ராஜபக்ஷ தலைமையிலான சிங்கள அரசுக்கு இந்திய அரசு ஏன் முழு ஒத்துழைப்பும் கொடுக்கிறது என்பதுதான் புதிராக இருக்கிறது.

இலங்கையில் தமிழ்க் கலாசாரச் சுவடுகளையே ராஜபக்ஷ அரசு அகற்றி வருகிறது. அங்குள்ள தமிழர் நாகரிகத்தைப் பற்றிய இந்திய - இலங்கைத் தொடர்பு, அங்குள்ள தமிழர் நாகரிகத்தைப் பற்றிய அகழ்வாராய்ச்சி சான்றுகள், செப்பேடுகள், பெருவழுதியின் சங்க கால நாணயங்கள் யாவும் அழிக்கப்பட்டுள்ளன. காரை நகர், கந்தரோடை, அனுராதபுரம் என்று பரவலாக இலங்கையில் உள்ள 26 இடங்களில் தமிழ்க் கலாசார நாகரிகம் புழங்கிய அடையாளங்கள் யாவும் அழிக்கப்பட்டு வருவதாகச் செய்திகள் வருகின்றன.

இதற்குக் காரணம் என்னவெனில், தமிழன் அங்கு பூர்வீகக் குடிமகன் என்று சொல்லக் கூடாது; அதற்கான அடையாளங்கள் கண்ணில் படக்கூடாது என்று ராஜபக்ஷ அரசு திட்டமிட்டு அழித்து வருகிறது.

இந்திய அரசு இலங்கை ராணுவத்துக்கு உதவுவதற்காக, 225 ராணுவ அதிகாரிகளை அங்கே அனுப்பியது ஏன்? நவீன ராடார்களும், ரூ. 400 கோடி கடனும் கொடுத்து உதவுவது யாரைக் கொல்ல? இதுவரை சிங்கள ராணுவத்தினர் 65,390 பேருக்கு இந்தியா பயிற்சி அளித்துள்ளது என்று கூறப்படுகிறது. அங்கே என்ன வேறு நாடுகளின் படையெடுப்பா நடக்கிறது, ராணுவப் பயிற்சி அளிக்க? நம்மவர்களை அழிக்க நாமே உதவி செய்வதா? இது என்ன அநியாயம்?

அங்கு ஒரு தேசிய இனம் தனது உரிமைக்காகப் போராடுகிறது. சிங்களப் பேரின வாதம் இனப் படுகொலையைத் திட்டமிட்டுச் செய்து வருகிறது. அதைக் கண்டிக்காமல் இலங்கைக்கு உதவுவது கொடுமையிலும் கொடுமை. இதில் உள்ள நியாயங்களை எடுத்துச் சொன்னால் தீவிரவாதிகளுக்கு ஆதரவு என்று ஒரு தவறான வாதம் வைக்கப்படுகிறது.

1948-ல் இலங்கை விடுதலை பெறும்போது அங்குள்ள தமிழர்கள் அதை ஏற்றுக்கொண்டனர். இந்தியாவில் முஸ்லிம்கள் பாகிஸ்தான் கேட்டதுபோலத் தமிழர்களும் கேட்டிருந்தால், அப்போதே தனி ஈழம் உருவாகி இருக்கும். ஆனால் தமிழர்கள் சிங்களவர்களுடன் சேர்ந்து வாழ விரும்பினர். அதுதான் அவர்கள் செய்த மிகப்பெரிய தவறு.

இராக்கிலும், ஆப்கானிஸ்தானிலும் அமெரிக்கா தலையிட்டது எப்படி? அதில் என்ன நியாயம் இருந்தது? தங்ஹள்ர்ய்ஹbப்ங் ஹஞ்ஞ்ழ்ங்ள்ள்ண்ர்ய் என்பது பன்னாட்டுச் சட்டத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகும். இவையெல்லாம் தெரிந்திருந்தும் மத்திய அரசு பாராமுகமாக இருப்பது மட்டுமல்லாமல், இலங்கை அரசின் இனப்படுகொலைக்குத் துணைபோகிறதே, அது ஏன்? என்பதுதான் புதிராக இருக்கிறது.

ஈழத் தமிழர்க்கு மத்தளத்தின் இரண்டு பக்கம் போன்று சிங்கள அரசு இவர்களை இந்தியாவின் கைக்கூலிகள் என்றும், இந்திய அரசோ இவர்களைத் தீவிரவாதிகள் என்றும் கைகோர்த்துக் கொண்டு அழிக்க முற்பட்டிருப்பதுதான் வேதனையிலும் வேதனை. இதன் விளைவாக ஒரு இனமல்லவா அழிக்கப்படுகிறது? அகிம்சையை உலகுக்கு போதித்த பாரத பூமி ஒரு இனப்படுகொலைக்கா துணை நிற்பது?

எப்படி வங்கதேசம் தன்னுடைய உரிமைகளைப் பெற தனிநாடு கண்டதோ அதேபோன்று ஈழத் தமிழர்கள் தங்களது பூர்வீக மண்ணில் தங்களுடைய இறையாண்மையை நிலைநாட்டப் போராடுகின்றனர். அவர்களுக்கு உதவுவதை விட்டுவிட்டுக் கண்ணைக் கட்டிக் கொண்டு காரணம் இல்லாமல் ஈழத்தில் வாழும் தமிழர்களை அழிக்க இந்திய அரசு சிங்களவருக்குத் துணை போவதை வரலாறு மன்னிக்கவே மன்னிக்காது

No comments: