Pages

Tuesday, January 20, 2009

தடை நீடிக்குமா? விலகுமா? கொ. காளீஸ்வரன் Thanks to Dinamani

தடை நீடிக்குமா? விலகுமா?

கொ. காளீஸ்வரன்

போதை தலைக்கு ஏறும் குணமுள்ள ஏராளமான மதுபான வகைகள் தாராளமாக விற்பனையாகும் தமிழகத்தில், ஏழை விவசாயிகள் விரும்பிப் பருகும் இயற்கை பானமான "கள்ளு'க்கு கடந்த 21 ஆண்டுகளாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது நியாயமா? என, தமிழ்நாடு கள் இயக்கம் தற்போது உரக்க கேள்வி எழுப்பி வருகிறது.

எனவே இத்தடையைக் கண்டித்தும், கள்ளை மதுபானப் பட்டியலில் இருந்து நீக்கி, இயற்கை உணவுப் பட்டியலில் சேர்க்க வேண்டும் என வலியுறுத்தியும் பல விவசாயிகள் அமைப்புகளை உள்ளடக்கிய இந்த இயக்கம் சார்பில் நாளை (ஜன.21) தமிழகம் முழுவதும் "கள் இறக்கும் போராட்டம்' அறிவிக்கப்பட்டிருக்கிறது.

தமிழகத்தில் 1.1.1987-ல் கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டது. பனை மரத்திலிருந்து இறக்கப்படும் கள்ளில் குறைவான அளவே போதை இருப்பதால், போதை அதிகரிக்க "குளோரல் ஹைட்ரேட்' கலக்கப்பட்டு விற்பனை செய்ய வாய்ப்புள்ளது. இது உடல் நலத்துக்குக் கேடு விளைவிக்கும். மேலும், இதைக் குடிக்கும்பட்சத்தில் உயிரிழப்புக்கும் வழிவகுக்கும் என்பதால் பொதுநலன் கருதி இந்தத் தடையை விதிப்பதாக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டது.

21 ஆண்டுகளாக நீடிக்கும் இத்தடையால் சுமார் 10 லட்சம் தொழிலாளர் குடும்பங்களுக்கு வேலையிழப்பும், 50 லட்சம் வேளாண் குடும்பங்களுக்குக் கூடுதல் வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. சுமார் 12,000 பனை மற்றும் தென்னைத் தொழிலாளர்கள் வேலையிழந்துள்ளனர் என, கள் இறக்குவதை ஆதரிக்கும் அமைப்புகள் புள்ளிவிவரங்களைத் தெரிவித்து வருகின்றன.

மேலும், இந்தியாவில் உள்ள 8 கோடி பனை மரங்களில் தமிழகத்தில் மட்டும் 5 கோடி பனை மரங்கள் உள்ளதாகவும், கள் தடை செய்யப்பட்டுள்ளதால் இவற்றில் பெரும்பாலான பனை மரங்கள் செங்கல் சூளைகளுக்கு எரிக்கப்படும் பொருளாகவே பயன்பட்டு வருவதாகவும் அந்த அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன.

இந்தத் தடை காரணமாக பல கிராமங்களைச் சேர்ந்த பனைத் தொழிலாளர்கள் திருப்பூர், ஆந்திரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு பிழைப்புத் தேடிச் சென்றுவிட்டனர் என்பதையும் மறுக்கமுடியாது.

பனை, தென்னை பூக்களில் வடியும் சுவை நீர் புளித்துப் போனால் கள்ளாக மாறி விடுகிறது. மேலும், தாய்ப்பாலில் உள்ள "லோரிக் அமிலம்' கள்ளில் மட்டுமே உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரத்தில் 42.8 சதவிகிதம் ஆல்கஹால் உள்ள போதை தரும் மதுபானங்கள் தங்கு தடையின்றி "குடி குடியைக் கெடுக்கும்; உடல்நலத்துக்கு கேடு விளைவிக்கும்' என்ற எச்சரிக்கை வாசகங்களோடு அரசே விற்பனை செய்து, அன்றாட வருமானம் ஈட்டும் ஏழைகளை போதைக்கு அடிமையாக்கி வருவது மட்டும் நியாயமா?

2008-2009-ம் ஆண்டில் அரசு மதுபானங்களின் விற்பனை இலக்கு ரூ. 13,500 கோடி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எனவே மதுபான விற்பனையில் பெருமளவில் கிடைக்கும் வருவாயை விட்டுக்கொடுக்க அரசு முன்வராததே, கள் தடைக்கு பிரதான காரணம். மேலும், மதுபான தயாரிப்பில் ஈடுபட்டுள்ளோர் இந்தத் தடையை நீட்டிக்க அரசை நிர்பந்தித்து வருகின்றனர் எனவும் தமிழ்நாடு கள் இயக்கம் வெளிப்படையாகவே குற்றம்சாட்டியுள்ளது.

வருமானம் குறைந்தால் ரூபாய்க்கு 1 கிலோ அரிசி, இலவச கலர் டி.வி., கேஸ் அடுப்பு உள்ளிட்டவற்றை தொடர்ந்து வழங்குவது சாத்தியமா என்ற கேள்வியும் இன்றைய ஆளும் அரசின் கண்முன் நின்றுகொண்டிருக்கிறது என்பதை மறுக்கமுடியாது.

இன்று சந்தையில் கிடைக்கும் வெளிநாட்டு "மென்பானங்களுக்கு' போட்டியாக பதனீர், கள்ளை சுவை நீராக சந்தைப்படுத்த நடவடிக்கை எடுத்தால் கிராம பொருளாதாரம் வளர்ச்சியுறும். இதற்கு வேளாண் வல்லுநர்கள், அறிவியல் அறிஞர்களின் முழு ஆதரவு உள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆனால், அதிக எண்ணிக்கையில் பனை மரங்களை கொண்ட தமிழகத்தில் மட்டும் கள்ளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது எந்த வகையில் நியாயம் என்று கேட்கும் ஆயிரக்கணக்கான பனை மற்றும் தென்னை தொழிலாளர்களுக்கு அரசு என்ன பதில் சொல்லப்போகிறது?

No comments: